செவ்வாய், 6 டிசம்பர், 2011

செயல்களும் விளைவுகளும்


செயல்களும் விளைவுகளும்

சின்ன சின்ன சிந்தனைகள் என்ற வரிசையில் சிந்தனைத்துளிகளை நான் தொடர்ந்து வெளியிட்டு வருகிறேன். என் முந்தைய பதிவுகளை படிப்பவர்களுக்கு அது தெரியும். அந்த வரிசையில் இன்றைய சிந்தனைத்துளி:
நாம் எவ்வளவோ செயல்களை வாழ்க்கையில் தொடர்ந்து செய்து வருகிறோம். நல்ல செயல்களையும் செய்கிறோம். தீய செயல்களையும் செய்கிறோம். இரண்டுமே பெரும் விளைவுகளை உண்டுபண்ணுகின்றன. இதைப்பற்றி இன்று கொஞ்சம் அலசலாம்.

1971-ஆம் வருடம் நவம்பர் 24-ஆம் தேதி இங்கிலாந்து நாட்டின் போர்ட்லாண்டு நகரிலிருந்து அமெரிக்கா நாட்டின் சீட்டில் நகருக்கு ஒரு விமானம் பறந்துகொண்டிருந்தது. அதில் பயணம் செய்த டி.பி.கூப்பர் என்கிற தீவிரவாதி அந்த விமானத்தை வெடிகுண்டை வைத்து மிரட்டி கடத்தினான். ரூ.20,00000/- அமெரிக்க டாலர்கள் பிணயத்தொகையாக தந்தால் பயணிகளை விட்டு விடுவதாக அரசாங்கத்தை மிரட்டினான். அரசாங்கமும் பயணிகளில் நலன் கருதி சம்மதித்தது. விமானத்தை தரையிறக்கி பணத்தைப் பெற்றுக்கொண்ட பின் மறுபடியும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து விமானத்தை மீண்டும் வானில் பறக்கச் சொல்லி நிபந்தனை விதித்தான். விமானம் வானில் பறந்தபோது தாழ்வாக பறக்கச் சொல்லி விமானிக்கு கட்டளையிட்டு, அவ்வாறு தாழ்வாக பறக்கும்போது ஒரு காட்டுப் பகுதியில் பாரசூட் மூலம் குதித்து தப்பி ஓடிவிட்டான். மாயமானவன் மாயமானவன்தான். இன்னும் அவன் பிடிபடவில்லை. காவல்துறையால் அவனை இன்னும் பிடிக்க முடியவில்லை. வழக்கு இன்னும் நிலுவையில்தான் உள்ளது.

பார்த்தீர்களா ஒரு மனிதனின் ஒரே ஒரு தீயசெயல்தான். ஆனால் அது அவனோடு நிற்காமல் முழு அரசாங்கத்தையும் நாட்டையுமே திகிலடையச்செய்து பாதிப்புக்குள்ளாக்கிவிட்டது. நாம் நம் குடும்பத்தில் ஓர் அங்கம். நம் குடும்பம் சமுதாயத்தில் ஓர் அங்கம். நம் சமுதாயம் நம் நாட்டில் ஓர் அங்கம். ஆகவே தனி ஆளாக நாம் முடிவெடுப்பினும் அது முழு தேசத்தையுமே பாதிக்கத்தான் செய்கிறது. உதாரணமாக குடும்பத் தகறாறுகளினால் உண்டாகும் வேதனையினால் ஒரு மனிதன் தற்கொலை செய்துகொள்ளும்போது என்ன நிகழ்கிறது பாருங்கள்? அவன் இறந்து விடுகிறான். அதன்பிறகு அந்த குடும்பத்திற்கு எவ்விதமான பிரச்சினைகள் உண்டாகிறது. அந்த குடும்பத்தலைவன் மரணமடைந்த பிறகு அவனது வாரிசுகள் எத்தனை துன்புறுகின்றனர். வயதுக்கு வந்த பிள்ளைகள் இருந்தாலும் பரவாயில்லை. சிறு பிள்ளைகளாக இருந்து விட்டால் அந்தோ பரிதாபம்தான். வறுமை நிலைக்குள்ளாகி உணவுக்கும் உடைக்குமே கையேந்துபவர்களாக மாறிவிடுகின்றனர். உலகத்துக்கும் குடும்பத்துக்கும் ஒரு ஏளனப்பொருளாகி விடுகின்றனர். தற்கொலை எதையுமே மாற்றுவதில்லை. மாறாக இருப்பவைகளையும் மோசமாக மாற்றி விடுகின்றது. இது ஒரு உதாரணம்தான். இதைப்போல இன்னும் நாம் செய்யம் சிறு மடத்தனங்கள் நம்முடைய வாழ்க்கையை மட்டுமல்லாம் நம்மைச் சார்ந்த முழு குடும்பத்தையுமே சிக்கலுக்குள்ளாக்குகின்றன. இறைவன் கொடுத்த வாழ்க்கையை இனிமையாக அனுபவிப்போம். துன்பங்களையும் வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு, இன்னும் சொல்லப்போனால் அவற்றை வரவேற்கத் துவங்கிவிடுவோமானால் துன்பங்களும் நமக்கு இன்பங்களாய் மாறிப்போகும். பிரச்சினைகளை சந்திக்கும்போதுதான் நம்முடைய முழு ஆற்றலும் வெளிப்படுகிறது. ஆகவே துன்பங்கள், பிரச்சினைகள் ஏற்படும்போது அவை உங்கள் திறமைக்கு விடப்பட்ட சவால் என்று நினைத்து அவற்றை சந்தியுங்கள். வாழ்வில் வளம் பெறுவீர்கள்.

“ உங்களுக்குள் நடக்கும் போரில் முதலில் வெற்றி பெறுங்கள். பிறகு உங்களுக்கு வெளியில் நடக்கும் போரிலும் எளிதாக வெற்றிபெறுவீர்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக