செவ்வாய், 6 டிசம்பர், 2011

பிரச்சினைகளுக்குத் தீர்வு - சிந்தனை அழிப்பான் (Thoughts Eraser) - பயன்படுத்த ஆரம்பித்துவிட்டீர்களா இல்லையா?


பிரச்சினைகளுக்குத் தீர்வு - சிந்தனை அழிப்பான் (Thoughts Eraser) - பயன்படுத்த ஆரம்பித்துவிட்டீர்களா இல்லையா?

சின்னச் சின்ன சிந்தனைகள் வரிசையில் இன்றைய சிந்தனைத்துளி:

நான் ஒரு தடவை சாலையில் நடந்து கொண்டிருந்தபோது முகங்குப்புற விழுந்தேன். அடுத்த 10 நிமிடங்கள் என்ன நடந்தது என்று எனக்கு நினைவில்லை. நினைவு திரும்பியபோது என் வாயானது மண், மண் துகள்கள், சிறு கற்கள் ஆகியவற்றால் நிறைந்திருந்தது. உடனடியாக அவற்றைத் துப்ப முடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டுத் துப்பி, நீரால் கழுவி வெகுநேரத்திற்கு பிறகே சகஜ நிலைக்குத் திரும்பினேன்.

இதைப்போலத்தான் நாம் சில நேரங்களில் இதைப்போல அசுத்தங்களை, ஆபாசங்களை நம்முடைய வாயின் ஓரத்தில் பதுக்கி வைத்திருக்கிறோம். சில நேரங்களில் சக மனிதர்களின் மீது பிரச்சினைக்குரிய நேரங்களில் அவற்றை துப்பி விடுகிறோம்.

நாம் எளிதாக துப்பி விடுகிறோம். ஆனால் அதன் விளைவுகளோ…. அப்பப்பா….! ஆசிட்டைவிட கடுமையான விளைவுகளை இவ்விதமான வார்த்தைகள் ஏற்படுத்தி விடுகின்றன. மோசமான குற்றச்சாட்டுகள், எரிச்சலான வார்த்தைகள், வாழ்க்கை முழுவதும் எண்ணி எண்ணி வேதனைப்படும் அளவிற்கான திராவக வார்த்தைகள் முதலியவற்றை நாகம் விஷத்தை உமிழ்வதைப் போல சக மனிதர்களின் மீது உமிழ்ந்து விடுகிறோம். ஒரு நிமிடமேனும் சிந்திப்போமில்லை.

தவறான வார்த்தைகளால் தலைமுறைகளும் அழிந்து போன வராறுகள் ஏராளம் உண்டு.

சரி. இதைத் தடுப்பது எப்படி? எப்படி இவ்வித சூழ்நிலைகளை மேற்கொள்ளுவது?

நம்முடைய வாயில் வரும் வார்த்தைகள் எங்கே உருவாகின்றன? நம்முடைய மூளையில்தான். நம்முடைய மூளையில் உருவாகும்போதே அவைகளை அழித்து விட்டோமானால் அவைகள் வார்த்தைகளாக உருவாகமால் தடுத்து விடலாம்.மாறாக உருவாக அனுமதித்து, அவைகளை சிந்தித்து சிந்தித்து திட்டங்களாக உருவாகி, எப்படி ஒரு தாயின் வயிற்றிலே கரு உருவாகி மாற்றங்கள் அடைந்து குழந்தையாக வெளிவருகிறதோ அப்படியே அந்த கெட்ட சிந்தனைகளும் தீய வார்த்தைகளாக, செயல்களாக மாறிவிடுகின்றன.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் உங்களுடைய மூளையில் சிந்தனை அழிப்பான் (Thoughts Eraser) ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். எப்போதெல்லாம் தீய எண்ணங்கள் உங்கள் மூளையில் தோன்றுகிறதோ அப்பொழுது உங்களுடைய சிந்தனை அழிப்பான் கொண்டு அழித்திடுங்கள். அப்போது அவைகள் வார்த்தைகளாக உருமாறுவது தடுக்கப்பட்டு விடுகிறது. வார்த்தைகள் தடுக்கப்பட்டு விடுவதால் தீய செயல்களும் உருவாவதும் தடுக்கப்பட்டு விடுகின்றது. இதைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் பழக்கத்தை நீங்கள் மேற்கொண்டால் மனித குலத்திற்கு எவ்வளவு பெரிய நன்மை உண்டாகும்? நினைத்துப் பாருங்கள்.

ஆகவே இனி அசாதரணமான பிரச்சினைகள் உங்களை சூழும்போது உங்கள் சிந்தனை அழிப்பானை பயன்படுத்துங்கள். உங்கள் பிரச்சினைகளை மேற்கொள்ளுங்கள்.

“ உங்கள் சிந்தனைகளில் கவனமாய் இருங்கள். ஏனென்றால் அவை எந்நேரமும் வார்த்தைகளாக மாறலாம் ”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக