செவ்வாய், 6 டிசம்பர், 2011

வாய்வுத்தொல்லையை ( ஆசன வாய்க் காற்று – Flatus ) தடுப்பது எப்படி? – ஓர் மருத்துவரீதியான நடைமுறை ஆலோசனை.


வாய்வுத்தொல்லையை ( ஆசன வாய்க் காற்று – Flatus ) தடுப்பது எப்படி? – ஓர் மருத்துவரீதியான நடைமுறை ஆலோசனை.

சிலருக்கு வாய்வுத் தொல்லை அதிகமாக இருக்கிறது. பொது இடங்களில் இருக்கும்போது அதிக சத்தத்துடன் வாய்வு வெளியேறும்போது அதிக சங்கடமாக உணர்கிறார்கள். அதிகமாயும் அடிக்கடியும் வெளியேறுகிறது. பயிறு, பருப்பு சாப்பிட்டால் அதிகமாகிறது. இதைத் தடுக்க என்ன செய்யலாம் என்று மண்டையைப் போட்டு உடைக்கிறார்கள். இவர்களுக்காக இந்த மருத்துவரீதியான ஆலோசனை.

முதலில் வாய்வு வெளியேறுவது என்பது ஒரு தொல்லையே ஒழிய அது ஒரு நோய் இல்லை என்பதை உணரவேண்டும். அதிகமாக வாய்வு வெளியேறுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். நாம் உண்ணும் போதும், பானங்களை பருகும்போதும் காற்றையும் சேர்ந்தே விழுங்குகிறோம். அவசரமாக சாப்பிடுவதாலும், இடையிடையே காற்றை விழுங்குவதாலும் நாம் உண்ணும் உணவோடு காற்றும் சேர்ந்து குடலை அடைந்து விடுகிறது. விழுங்கிய காற்றில் பெரும்பகுதி ஏப்பமாக சேர்ந்து வெளியேறிவிடுகிறது. ( ஏப்பம் வராதவர்களுக்கு இந்த பிரச்சினை சற்று அதிகமாகவே இருக்கலாம். ) மீதி பகுதி குடல் வழியாக செல்லும்போது ஓரளவு உறிஞ்சப்படுகிறது. ஆனால் அதில் அடங்கியுள்ள நைட்ரஜன் வாய்வோ இவ்விதமாக உறிஞ்சப்படுவதில்லை. இதுதான் ஆசன வாய் வழியாக கெட்ட மணத்துடன் வெளியேறுகிறது. எனவே உணவு உண்ணும்போதும் பானங்கள் பருகும்போதும் அவசரப்படமால் நிதானமாக உண்ணுங்கள் அல்லது அருந்துங்கள். இதன்மூலம் காற்றை விழுங்குவதை நாம் தடுக்கலாம்.

இரண்டாவதாக நாம் சாப்பிடும் உணவில் உள்ள செரிக்காத பகுதிகளில் பாக்டீரியாத் தாக்குதலினால் வாய்வு உற்பத்தியாகிறது. இது ஆசன வாய் மூலமாக வெளியேறுகிறது. பயிறு பருப்பு சாப்பிடும்போது இது சற்று அதிகமாகிறது என்பதும் உண்மைதான்.

எந்த உணவுமே சரியாக செரிக்காத நிலை உண்டானால் வாய்வு உற்பத்தியாகலாம். எனவே உணவு நன்றாக செரிக்க வேண்டுமானால் அவற்றை நன்கு வேகவைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக குக்கரில் வேகவைக்கும்போது உணவு நன்றாக வேகிறது.

பருப்பு, பயறு போன்றவற்றை உண்ணும்போது வாய்வு அதிகம் உற்பத்தியாவதன் காரணம் என்னவெனில் இவ்வகை அவரை வகை தாவரங்களின் உள்ள புரதங்கள் சிக்கலானவை. இவை எளிதில் செரிப்பதில்லை. மாறாக முளைக்க வைத்து சமைத்தால் இவை எளிதில் செரிக்கும் தன்மை உடையனவாக மாறும். முளைக்க வைக்க வேண்டுமெனில் கடலை, பயறு போன்றவற்றை நீரில் நனைத்து ஈரத்துணியால் மூடிவைக்க வேண்டும். ஓரிரு நாட்களில் அவை முளைக்க ஆரம்பித்துவிடும். அதன் பிறகு எடுத்து சமைத்தால் அவை எளிதில் செரிக்கும். வாய்வுத்தொல்லையும் இருக்காது. புளிக்க வைப்பதாலும் உணவுகள் எளிதில் செரிக்கும் தன்மையை அடைகின்றன. இட்லி, தோசை போன்றவை இதனால்தான் எளிதில் செரிக்கும் உணவுகளாக இருக்கின்றன. தாவர உணவுகளில் உள்ள நார்ப்பொருளும் சில சிக்கலான புரதங்களுமே செரிக்க கடினமானவை. இதற்காக தாவர உணவை உணவில் சேர்க்காமல் தவிர்த்துவிடாமல் இருந்து விடாதீர்கள். ஏனெனில் தாவர உணவுகளால் கிடைக்கும் சத்துக்கள் ஏராளம். எனவே அவற்றை தாரளமாக உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனால் அவற்றை செரிக்கக் கூடிய தன்மை உள்ளதாய் மாற்றி சமைத்து உண்ணுங்கள்.

மேலே கூறிய முறைகளை கடைப்பிடிப்பதின் மூலம் வாய்வு வெளியேறுவதை தவிர்க்கலாம். அதற்கு அப்புறமும் வெளியேறினால் அதற்காக கவலைப்பட தேவையில்லை. வெட்கப்படவும் தேவையில்லை. இது எல்லோருக்கும் நடப்பதுதான். இயற்கையானதுதான். எனவே சங்கடப்படாதீர்கள். நார்மலாய் இருங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக